
என் உயிர்த்தோழி
ஜூலை 30, 2008என் உயிர்த் தோழியே
எங்கிருக்கிறாய் நீ
என் இத்துணை வருட வாழ்வில்
என் தோழியென
எனைக் கடந்து சென்றோர் பலர்
ஆனால் நீ மட்டும்
என்னுள் நீக்கமற நிறைந்து விட்டாய்.
என்னிடம் உன்
புகைப்படம் இல்லை – ஆனால்
என் இதய சுவரெங்கும்
எண்ணெமென்னும் வண்ணத்தூரிகையால்
உன் முகம் தீட்டியுள்ளேன்.
எதிர்காலக் கனவுகள்
பளிச்சிட்ட கண்களில் இன்று
தாய்ப்பாசம் உரையுமோ?
இளமை ஊஞ்சலாடிய
தேகத்தில் காலதேவன்
தீட்டிய ஓவியம்
வரிகளென வெளிப்படுமோ?
நான் தனிமையில் சிந்தித்தால்
பசுமையான நினைவலைகள்
மனதைத் தழுவிச் செல்கின்றது
தமிழகத்தின் தலைநகரில்
திக்குத் தெரியாமல்
பேருந்தில் பயணித்த நாட்களும்
வேலை தேடித்திரிந்த நாட்களும்
வேலை கிடைக்காத பொழுது
தேடிய ஆறுதல்களும்…
மிகவும் இனிமையான
நாட்கள் அவை.
என் இதயத்தின்
ரகசியங்கள் அறிந்தவள் நீ
உன் வாழ்வின் குறிக்கோள்
உணர்ந்தவன் நான்
வாழ்க்கை ஓட்டத்தில்
நாமிருவரும் விலகிச் சென்றுவிட்டாலும்
உன்னுடனான என் நட்பு
என்றும் மறையாது அதை
நீயும் அறிவாய்.
அலைபேசியும் மின்னஞ்சலும்
இன்று நம்மைப் பிணைக்கும்
புதிய நண்பர்கள் – அவையும்
சில நேரம் மறந்துவிடுகின்றன
ஆனால் நட்பு மறையாது மறக்காது.